INDvAUS: `தலைவணங்கிய சேப்பாக்கம்!' - வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடிய கோலி - ராகுல்!

இன்னும் அப்படியே அந்த இன்னிங்ஸ் ஞாபகமிருக்கிறது. இந்தியாவில் நடந்த 2011 உலகக்கோப்பையின் முதல் போட்டி அது. கோலிக்கு வெறும் 22 வயது தான். வங்கதேசத்துக்கு எதிராக சேவாக் வெறியாட்டம் ஆட இன்னொரு முனையில் கோலி இளமை துடிப்புடன் ஆடி ஒரு சதம் அடித்திருப்பார். கோலியின் சிறப்பான இன்னிங்ஸூடன் தொடங்கிய தொடரின் முடிவில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. காலச்சக்கரம் சுழல்கிறது. 12 ஆண்டுகள் கடந்து உலகக்கோப்பை மீண்டும் இந்தியாவில் நடக்கிறது. இப்போதும் இந்தியாவிற்கான முதல் போட்டியில் கோலி ஆடுகிறார். அப்போதைக்கும் இப்போதைக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். அங்கே 2011 இல் இந்தியாவின் எதிராளி வங்கதேசம்தான். ஆனால், இங்கே ஆஸ்திரேலியா. அங்கே பெரிதாக எந்த சிக்கலான சூழலும் இல்லை. தடையற்ற நதிபோல பாய்ந்து செல்ல முடிந்தது. ஆனால், இங்கே அப்படியில்லை. என்னவெல்லாம் சவால் இருக்குமோ என்னவெல்லாம் சிக்கல் இருக்குமோ எல்லாமோ இருந்தது. இரண்டுமே முற்றிலும் வேறு வேறான சூழல். கோலியுமே கூட இப்போது வேறாக இருந்தார். 2011 இல் இளம்புயல். இப்போது அணியின் சூப்பர் சீனியர்!

ஆஸ்திரேலியாவிற்கு டாப் ஆர்டர் மொத்தமும் வீழ்ந்தது என்னவோ இந்தியா எதிர்கொள்ளாத புதிய பிரச்னையெல்லாம் இல்லை. 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக டாப் ஆர்டர் இப்படித்தான் சீட்டுக்கட்டாய் விழுந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஞாபகமிருக்கிறதா? அதிலும் அப்படித்தான். சமீபத்தில் ஆசியக்கோப்பையில் மழையால் கைவிடப்பட்ட போட்டியில் ஷாகின் ஷா அப்ரிடியிடம் பதில் பேச முடியாமல் இந்திய வீரர்களின் பேட்டுகள் தலைகுனிந்ததே? ஆக, இப்படி டாப் ஆர்டர்கள் சொதப்புவதோ அந்த சொதப்பலின் மூலம் இந்தியா வீழ்வதோ புதிய கதையெல்லாம் அல்ல. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி அப்படி வீழ்ந்திருந்தால் இந்திய அணி மொத்தமாக உடைந்திருக்கும். ஏனெனில், இது உலகக்கோபையின் முதல் போட்டி. இன்னும் 8 லீக் போட்டிகளில் இந்திய அணி ஆடியாக வேண்டும். அந்த 8 போட்டிகளுக்குமான ஊக்கத்தையும் தெம்பையும் இங்கிருந்துதான் எடுத்து செல்ல வேண்டும். அப்படியொரு இக்கட்டான சூழலில்தான் இந்திய அணிக்காக அதி முக்கிய இன்னிங்ஸை ஆடி கொடுத்திருக்கிறார்கள் கோலியும் ராகுலும்.

Previous Post Next Post