விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முத்துசாமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி, மாரியப்பன் படுகாயமடைந்தார். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, 2 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில், சிகிச்சை பலனின்றி மாரியப்பன், நேற்றிரவு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

தொடர்ந்து, உறவினர்கள் சம்மதத்துடன் மாரியப்பனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதன்படி, மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு மாரியப்பனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்புப்படி மாரியப்பனின் உடல் முறையான அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உயிரிழந்த மாரியப்பனின் உடல் அவரின் சொந்த ஊரான முகவூருக்குக் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இறுதிச்சடங்குக்காக மாரியப்பனின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் ராமச்சந்திரன், சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் ப்ரீத்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மலர் வளையம் வைத்து மாரியப்பனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். உயிரிழந்த மாரியப்பனுக்கு இரண்டு மனைவிகள், 6 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரண்டாவது மனைவியின் கவனிப்பில் 6 பிள்ளைகளும் இருந்துவருகின்றனர். எனவே குடும்பச்சூழல் கருதி, குழந்தைகளின் படிப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் அரசு சார்பில் உதவிகள் செய்யவேண்டுமென மாரியப்பனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
