வீட்டு சுபநிகழ்வுகளில் தாம்பூலத் தட்டில்வைத்து வழங்கப்படுவதோடு, இளையோர் முதல் வயதானோர் வரை மென்று சுவைக்கும் பாரம்பர்யமான பொருளாகவும் விளங்குகிறது வெற்றிலை. இதற்கு வேறு சில பெயர்களும், ரகங்களும், அவற்றுக்குத் தனி குணங்களும் பயன்களும் உண்டு. கற்பூரக்கொடி, கள்ளர்கொடி, பச்சைக்கொடி, அந்தியூர் கொடி, கணியூர் கொடி போன்றவை வெற்றிலையின் வெவ்வேறு ரகங்கள். அதேபோல நாகவல்லி, வெந்தன், திரையல் போன்ற மாற்றுப் பெயர்களிலும் வெற்றிலையைக் குறிப்பிடுகிறோம்.
இப்படி பல ரகங்களாக விளையும் வெற்றிலை குறித்துப் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால், வெற்றிலையில் உள்ள சவிக்கால் (Chavicol) எனும் சேர்மம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது என்பதுதான். வெற்றிலையில் உள்ள ஆண்டி-இன்ஃபலமெட்ரி (Anti inflammatory) தன்மையானது பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவைத் தடுக்கவும் செய்கிறது. வாய் மற்றும் பல் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய, ஓரல் ஹெல்த்துக்கு (Oral Health) தேவையான சேர்மங்கள் அடங்கியுள்ளதால் இதைப் பயன்படுத்தி பெட்டல் லீப் மவுத் வாஷ் தயாரிக்கலாம். பெட்டல் லீப் மவுத் வாஷைத் தயாரிப்பது எளிதானது. உற்பத்தி செலவும் குறைவு. மேலும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மவுத் வாஷ் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
திருச்சி மாவட்டத்தில் முசிறி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 2.2 டன் வீதம், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 900 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. மொத்த விளைச்சலிலிருந்து ஒரு டன் அளவுக்கு எடுத்துக்கொண்டு பெட்டல் லீப் மவுத்வாஷ் தயாரிக்கலாம். தண்ணீர் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ வெற்றிலையிலிருந்து சுமார் 40 லிட்டர் வீதம், ஒரு டன் வெற்றிலையிலிருந்து ஏறக்குறைய 40,000 லிட்டர் வெற்றிலைச்சாறு எடுக்கலாம். 500 மிலி கொண்ட பெட்டல் லீப் மவுத்வாஷ் தயாரிக்க, 100 மிலி வெற்றிலைச் சாறு தேவைப்படும். எனில், நாற்பதாயிரம் லிட்டரிலிருந்து 4 லட்சம் மவுத் வாஷ் உருவாக்கலாம். ஒன்றின் விலையை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.
